மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 10

 


வாழி யாதன் வாழி யவினி 

மாரி வாய்க்க வளகனி சிறக்க 

வெனவேட் டோளே யாயே யாமே 

பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் 

தண்டுறை யூரன் றன்னோடு 

கொண்டனன் செல்க வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : 

ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும்.


சொற்பிரிப்பு

மாஅத்து – மா அத்து; 

புலாலஞ் சிறுமீன் – புலால் அம் சிறுமீன்; 

ஊரன் றன்னொடு – ஊரன் தன்னொடு.


அருஞ்சொற்பொருள்

மாரி – மழை; 

வாய்க்க – வாய்ப்பதாக, தப்பாமல் பொழிவதாக; 

மா அத்து – மாமரத்தையுடைய. 


உரை

ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், நாட்டின்கண் மழை காலந் தப்பாமல் பொழிவதாக என்றும், வளமனைத்தும் மிகச் சிறந்து விளங்கட்டும் என்றும் விரும்புபவள் எம்பெருமாட்டி. யாங்களோ, மலர்ந்து மணங்கமழும் மாமரப் பொழிலையும் புலால் மணம் வீசும் சிறிய மீன்களையும் உடைய குளிர்ந்த நீர்த்துறை அமைந்த சிறந்த ஊரினது தலைவனாகிய எம்பெருமான் எம்பெருமாட்டியைத் தன்னொடு தன் ஊர்க்கு அழைத்துக்கொண்டு செல்வானாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


உரை விளக்கம்

மாரி வாய்த்தலாவது மிகையும் குறைவுமின்றிப் மழை பெய்தல் என்பதாம்.  அறம் பொருள் இன்பம் நடத்தற்கேதுவாக இருப்பது மழை. அம் மழையின்றி நாட்டோர்க்கு யாதும் உறுதியில்லையாகலின் மாரி வாய்க்கவென வேண்டுதல் தலைவிக்கு மாண்பாயிற்று என்க. வளம் என்றது மழைவளம் மிகுதலினால் உண்டாகும் உணவு முதலியவற்றின் பெருக்கமாம். 

குளிர்ந்த துறையின்கண் மலர்ந்து மணங்கமழும் மாமரத்தையும் புலால் நாறும் சிறுமீனையும் ஒருங்கே உடைய ஊர் என்பது அகமலர்ந்து வரவேற்கும் தலைவியும் தோழியருமாகியோரும், பிற பழிதூற்றும் சிறுபுன்மாக்களும் உடைய ஊர் என்பதாம். அதனால், தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் எனும் தோழிகளின் விருப்பம் குறிப்பாயிற்று என்க. மெய்ப்பாடும் பயனும் அவை. 


இலக்கணம் : அம் – இசைநிறை