மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 7

 


வாழி யாதன் வாழி யவினி 

அறநனி சிறக்க வல்லது கெடுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

யுளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்குந் 

தண்டுரை யூரன் றன்னூர்க் 

கொண்டனன் செல்க வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும். 


அருஞ்சொற்பொருள் : 

 யாய் - எம்பெருமாட்டி 

அறம் – அன்பு முதலிய நல்லறங்கள் 

நனி – மிகுதி 

அல்லது – தீயது 

உளைப் பூ – உள் துளையுள்ள பூ 

கிளை – இனம் 

குருகு – வெள்ளாங்குருகு எனும் பறவை

தண்டுறை – குளிர்ந்த துறை 

ஊர்க் கொண்டனன் – ஊரினைத் தனது எனக் கொண்டவன் (முற்றெச்சம்) 


உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், அறம் பெரிதும் சிறக்க என்றும், தீவினைகள் முழுதும் கெட்டொழிக என்றும் பெரிதும் விரும்பியவள் எம்பெருமாட்டி. யாங்களோ, உளையுள்ள மலரினையுடைய மருதமரத்தின்கண் தன் இனத்தோடு வாழும் குருகுகள் இருத்தற்கிடனானதும் குளிர்ந்த நீர்த்துறையினை உடையதும் ஆகிய ஊரினைத் தனதாகக் கொண்டவனாகிய எம்பெருமான் தன்னூர்க்கு எம்பெருமாட்டியை அழைத்துச் செல்வானாக என்று விரும்பியிருந்தேம். 


உரை விளக்கம் : “அறநனி சிறக்க அல்லது கெடுக” எனும் வரிகளை நோக்குக. 

அல்லவை தேய அறம்பெருகும்; 

நல்லவை நாடி இனிய சொலின் – குறள் 96  

தீயவை தேய்ந்து அழிதலும் அறம் பெருகி நிறைதலும் நாடி கூறப்படும் இனிய சொல்லை எடுத்துரைக்கும் திருக்குறள் மொழியே இங்கு உயர்குடிப் பிறந்த தலைவிக்கும் மாண்பாயிற்று எனக் காண்க. தனக்கு இயல்பான நற்பண்புகளையே காட்டித் தலைவனது பிரிவால் ஏற்பட்ட துயரத்தை சதுரப்பாட்டோடு மறைத்தனளாக அவளது நல்லியற் பொறையின் மாண்பினைத் தோழி நவின்றமை குறிப்பெச்சம் என்க. 

உளைப்பூவுடைய மருதத்தின்கண் குருகு தன் இனத்தோடிருந்து இன்புறுமாறுபோல, பெருமான் தனது பொலிவுடைய இல்லத்தின்கண் தம் பெருமாட்டியோடு இனிதிருந்து இல்லறம் நிகழ்த்தவேண்டும் என்பது ‘எம்மனோர் வேணவா’ எனும் உள்ளுறுத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.