வாழி யாதன் வாழி யவினி
பால்பல வூறுக பகடுபல சிறக்க
வெனவேட் டோளே யாயே யாமே
வித்திய வுழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞ லூரன் றன்மனை
வாழ்க்கை பொலிக வெனவேட் டேமே.
துறையும் விளக்கமும் : (முதல் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)
அருஞ்சொற்பொருள் :
பால்பல ஊறுக – ஆன் முதலியனவற்றின் பால் மிகுதியாகச் சுரப்பனவாக;
பகடு – எருமைக்கடா;
வித்திய – விதையினை விதைத்த;
நெல்லொடு பெயரும் – கூலிக்கு உழவு செய்தோர் நெல்லோடு செல்லுதற்கு இடனான;
பால்பல ஊறுக – ஆன் முதலியனவற்றின் பால் மிகுதியாகச் சுரப்பனவாக;
பகடு – எருமைக்கடா;
வித்திய – விதையினை விதைத்த;
நெல்லொடு பெயரும் – கூலிக்கு உழவு செய்தோர் நெல்லோடு செல்லுதற்கு இடனான;
பூ கஞல் – மலர் செறிந்த;
வாழ்க்கை பொலிக - இல்லறம் பொலிவுபெற்றுச் சிறந்து விளங்குக.
உரை : சேரமன்னன் ஆதன் வாழ்க எனவும், அவனது மைந்தன் அவினி வாழ்க எனவும் வாழ்த்தியவள் எம் பெருமாட்டி. மேலும், ஆன் முதலியவற்றின் பால் மிகுதியாகச் சுரப்பனவாக எனவும், எருமைக் கடாக்கள் பலவாகப் பெருகிச் சிறக்கட்டும் எனவும் விரும்பியவள் எம்பெருமாட்டி.
யாங்களோ, விதை விதைத்த உழவர் கூலியாக நெல்லைப் பெற்றுச் செல்லுதற்கு இடனான மலர்கள் செறிந்த சிறந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமான் தன் இல்லக்கிழத்தியோடிருந்து இல்வாழ்க்கையின்கண் எவ்வாற்றானும் மேம்பட்டுப் பொலிவுறுக என்று பெரிதும் விரும்பியிருந்தேம்.
சிறப்புரை : பால்பெருக என்றது ஆன்பாலும் எருமைப் பாலும் ஆகியன மிகப் பெருகி இல்லத்தின்கண் அமைந்தோர் நலமுற்று வாழ்வதாகும். பகடுபல சிறக்க என்றது உழவுத் தொழிலுக்குத் தேவையான எருமைக் கடாக்கள் சிறப்பாக விளங்கி உழவுத் தொழில் சிறக்கட்டும் என்பதாம். பால்வளமும் பகட்டு வளமும் விருந்தோம்பல் பொருட்டுத் தலைவியால் விரும்பப்பட்டன என்பதே விளக்கம்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு – குறள் 81
என்பனவாகலான் அவ்வறத்திற்கு ஏதுவான இவற்றின் பெருக்கத்தை வேண்டுதல் தலைவியின் மாண்பாயிற்றென்க.
வித்திய உழவர் என்றது கூலிக்காக விதை விதைத்தல் போன்ற தொழிலைச் செய்யும் உழவரைக் குறிப்பது. அவ் வுழவர் நெல் விளைந்து பெருகிக் கிடைக்கும் பெரும்பயனைக் கருதார்; அன்றைய தொழிலுக்குக் கூலியாகக் கிடைக்கும் நெல்லையே குறியாய்க் கொள்வார். இத்தன்மை, இல்லறம் எனும் நற்பேறு கருதாது அன்றன்றைக்குக் கிடைக்கும் வருவாயையே பெரிதாய்க் கொள்ளும் பரத்தையரை உணர்த்துவதாம்; அத்தகையோரின் சிற்றின்பத்தையே நாடிச் செல்கிறாய் எனத் தலைவனை உள்ளறுத்துக் கழறுவது என்பதுமாம். பூக்கஞல் ஊரன் என்றது மலர் செறிந்த ஊரன் என, குறிப்பால், மாண்புடைய இல்லக்கிழத்தியைப் பெற்ற ஊரனை உணர்த்துவதாம்.