மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 6

 


வாழி யாதன் வாழி யவினி 

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக 

என வேட்டோளே யாமே யாமே 

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை 

தண்டுறை யூரன் வரைக

எந்தையும் கொடுக்க வெனவேட் டோமே. 


துறை விளக்கம் : 

தலைவன், களவின்பமே பெரிதும் விரும்பித் தலைவியை மணம் செய்து உரிமையாக்கிக் கொள்ளும் எண்ணம் இன்றி ஒழுகி வந்தான். பின்னர் தோழியின் வற்புறுத்தலால் மணம் செய்து கொண்டான். ஒருநாள், தலைவன் தோழியை நோக்கி யான் மணந்துகொள்ளும் நாளை நீட்டித்து வந்த காலத்தே நீவிர் எவ்வாறு இருந்தீர் என்று வினவினான். அப்போது, தோழி தலைவனுக்கு உரைத்ததுவே இப்பாடல். 

களவுக் காலத்தே பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து மீண்டுவந்து தலைவியை உரிமையாக்கிக்கொண்ட தலைவன் தோழியிடம் பிரிவாற்றியிருந்த காலத்தே நீவிர் இருந்த முறைமைதான் என்னே எனக் கோடல் நிலைமை உணர்தல் குறித்தாம். 

இவற்றின்கண் யாங்கள், ஊரன் மணம்புரிய விளைக, எந்தையும் கொடுக்க என்றும் தெய்வத்தை வணங்கி நின்றோம் என்றும் வருதலின் இவ்வைந்து செய்யுட்கட்கும், "அற்றம் இல்லாக் கிழவோள் சுட்டிய தெய்வம் கடத்தினும்" என வரும் விதி கொள்க. களவொழுக்கம் எனும் வருத்தம் தீர்ந்து இல்லாதாக்கிய தெய்வத்துக்கு நன்றிக் கடன் செய்யுக எனத் தலைவனைச் சுட்டி அறிவுறுத்திய தலைவி என்பது பொருளாம். 


அருஞ்சொற்பொருள் : 

யாய் - எம்பெருமாட்டி; 

நந்துக - நீளுக; 

முகைந்த - அரும்பெடுத்த; 

தண்டுறை - குளிர்ந்த நீர்த்துறை; 

வரைக - திருமணம் புரிந்து உரிமையாக்கிக் கொள்க; 

வரைதல் - உரிமையாக்குதல், திருமணம் செய்தல்; 

வேட்டேம் - விரும்பினேம்.


உரை :  

ஆதன் வாழியென்றும், அவினி வாழியென்றும், வேந்தன் பகைமை தணிந்து அறநோக்குடையுடையவனாக என்றும், அவனது வாழ்நாள் நீளுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. அடிச்சியராகிய நாங்களோ, மலர்ந்த பொய்கைக்கு அணியாக விளங்கும்  முகைந்த தாமரையொடு குளிர்ந்த நீராடு துறையினை உடைய ஊர்த் தலைவனாகிய எம்பெருமான் விரைந்து வந்து எம்பெருமாட்டியை திருமணம் புரிந்து கொள்க என்றும், அவ்வாறு தலைவன் மகர் கேட்டுவரும் காலத்தே எம் தந்தையும் மறுக்காது உவந்து மகட்கொடை தருக என்றும் விரும்பித் தெய்வத்தை வணங்கி நின்றோம். 


உரைவிளக்கம் :

ஈண்டுத் தலைவியை 'யாய்' என்றது, தலைவனை எதிர்ப்பட்ட அன்றே தலைவன் தன்னை மணஞ் செய்தான் எனக்கொண்டு தலைவியானவள் கற்பு பூண்டொழுகி நின்ற காரணத்தால் ஆம். 

வேந்து பகை தணிக என்றது, பகை தணிந்தால்தான் அறம் சீராக வளரும் என்பதால் ஆம். 

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 

கொல்குறும்பும் இல்லது நாடு" எனும் குறட்பாவையும் (735) இங்கே மனத்தில் கொள்க. 

'வேந்து பகை தணிக, வேந்தன் வாழ்நாள் நீள்க' என்றது அத்தகைய அறநோக்குடைய மன்னன் வாழ்நாள் நீளுக என்றும், தனது இயல்பான மனத்தினால் தலைவனைப் பிரிந்து வாழும் துயரத்தை நன்கு மறைத்து உறைவாளாயினள் என்றும் பொருள்படவாம். 

இனி, அரசன்தான் மக்கட்குக் கண்ணால் காணும் கடவுள் என்பதால் அவனைப் பல்லாண்டு கூறி வாழ்த்துதல் சான்றோர் செயலாயிற்று. இதனால், இவையும் தலைவியின் மாண்பாயிற்று என்க. 

இனி, சிறந்த குடியிற் பிறந்த எம்பெருமானாகிய நீ எம் தலைவியை வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்துகொண்டனை. அவளும் அறவாழ்க்கைகே பொருந்தி நின்றாள். அதனால், தலைவியை விரைந்தே மணமுடித்துப் பல்லாண்டு வாழவேண்டும் எனக் குறிப்புடையேம் என்பது உள்ளுறை பொருளையுடையது என்க. 

ஊரன் வரைக, எந்தையும் கொடுக்க எனத் தெய்வத்தை வணங்கி நின்றோம் என்பது தோழியர் கூற்று. இதன்கண், தலைவி பிரிவினால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பிறர் அறிய நேர்ந்தால் பழியுண்டாகும் என்பதால் அதனை மறைத்து வாழ்ந்தாள் என்பது குறிப்பெச்சம். இதனால் தலைவியின் பொறைநலம் தலைவனுக்கு உணர்த்தப்பட்டது என்க. மெய்ப்பாடும் பயனும் அது.