வாழி யாதன் வாழி யவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக
வெனவேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்குந்
தண்டுறை யூரன் கேண்மை
யம்ப லாகற்க வெனவேட் டேமே.
துறை விளக்கம் :
ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும்.
சொற்பிரிப்பு :
தீதில் லாகுக – தீது இல்லாகுக
கயலார் நாரை – கயல் ஆர் நாரை
போர்விற் சேக்குந் – போர்வில் சேக்கும்
யம்ப லாகற்க – அம்பல் ஆகற்க
அருஞ்சொற்பொருள் :
நன்று – நன்மையானவை
கயல் – கயல் எனும் மீன்
ஆர் – தேராந்து உண்ணுதல்
போர்வு - நெற்போர்வு
சேக்கும் – தங்கும்
தண்டுறை – குளிர்ந்த நீர்த்துறை
கேண்மை – நட்பு, உறவு, காதலுறவு
அம்பல் – பழிமொழி, புறங்கூற்று, சிலர் அறிந்த பழிதூற்றுகை,
உரை :
ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், நாட்டின் நன்மையான அனைத்தும் பெரிதாய்ச் சிறப்புறுக என்றும், தீங்கு தருவன எல்லாம் முழுவதும் தேய்ந்து இல்லையென ஆகுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. அடிச்சியராகிய யாங்களோ, கயல்மீனைத் தேர்ந்துண்ட நாரைகள் நெற்போர்வின்கண் இனிதே உறைதற்கு இடனான குளிர்ந்த நீர்த்துறையமைந்த சிறந்த ஊர்த்தலைவனாகிய எம்பெருமான் எம்பெருமாட்டியின்பால் கொண்டுள்ள காதலுறவு ஒரு சிலரே அறிந்து பழிதூற்றுமளவும்கூட ஆகாதொழிக என்று பெரிதும் வேண்டியிருந்தோம்.
உரை விளக்கம் :
நன்று, தீது என்பதற்கு விளக்கமாக அறவினை, தீவினை எனக் கொள்ளுதல் மிகப் பொருந்துவனவாம். கயல் ஆர் நாரை என்பதனைக் களவின்பம் துய்த்தலை உடைய தலைவன் தலைவி இருவர்க்கும் உவமையாகக் கொள்க.
மருதநிலக் கழனியில் கயலமீன்களைத் தேர்ந்து உண்ட நாரையானது வைக்கோற்போர் அடைந்துள்ள இடத்தை நாடிச் சென்று இனிதே உறங்குதல் இயற்கை. அதுபோல, களவு நெறியாலே காலமும் இடனுந் தேர்ந்து இன்பம் நுகர்ந்த தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து தம் இல்லத்தே சேர்ந்து இனிது உறைதல் வேண்டும் என தோழியர் விரும்புவது ‘குறிப்புப் பொருள்’ பொதிந்துள்ளது என்க.
சிலரும் பலரும் கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற – நற்றிணை 149
அம்பல் எனும் பழிதூற்றுதலை நற்றிணை கூறும் விளக்கம், அலர் தூற்றலின்போது பெண்கள் செய்யும் உடற் பாவனைகளை மிகத் தெளிவாக உணர்த்தும் சொற்சித்திரமாம். அத்தகைய பழிதூற்றலுக்கும் பொறாதவள் தலைவி என்பதால் ‘அம்பல் ஆகற்க’ எனத் தோழிகள் வேண்டி நிற்பது கருத்து என்க.
இலக்கணம் :
ஆர்நாரை – வினைத்தொகை
நன்றுபெரி(து) – ஆசிரியப் பாவில் கனிச்சீர் வரலாகாது. ஆதலால், கடையெழுத்தாக வரும் குற்றியலுகரத்தை அலகிடாமல் கூவிளங்காய் ஆகக் கொள்ளவேண்டும்.