மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 2



வாழி யாதன் வாழி யவினி 

விளைக வயலே வருக விரவல 

ரெனவேட் டோளே யாயே யாமே 

பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்குந் 

தண்டுரை யூரன் கேண்மை 

வழிவழிச் சிறக்க வெனவேட் டேமே. 


துறையும் விளக்கமும் : (முதல் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)  


அருஞ்சொற்பொருள்

யாய் – எம்பெருமாட்டி

வருக விரவலர் என – இரவலர் வருவாராக என 

வேட்டேள் – விரும்பினள்

நீலம் – கருங்குவளை மலர்

நெய்தல் நிகர்க்கும் – நெய்தல் மலர் ஒப்பாகும்; 

தண்துறை – குளிர்ந்த நீர்த்துறை 

கேண்மை – உறவு, உரிமை, நட்பு


உரை : ஆதன் வாழி, அவினி வாழி என்றும், கழனிகளில் கூலங்கள் குறைவின்றி விளைந்து இரவலர் நாற்திசையினின்றும் வருவாராக என்றும் விரும்பியவள் எம் பெருமானாட்டி. தோழியராகிய நாங்களோ, பல் இதழ் கருங்குவளையொடு நெய்தல் மலரும் ஒப்பாக விளங்கும் குளிர்ந்த நீர்த்துறையினையுடைய பெருமான் எம்பெருமானாட்டிபாற் கொண்ட காதல் உரிமை நாள்தோறும் பெருகிச் சிறப்புறுவதாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


உரைவிளக்கம்: வயல் விளைக என்றது, இல்லறம் சிறப்புற, உலகிண்கண் தலைசிறந்த உழவுத் தொழில் சிறப்புடன் விளங்குவதன் தேவையை உணர்த்துவதாம். இரவலரைப் பேணுவது இல்லறச் சிறப்புகளுள் ஒன்று என்பதனால், இரவலர் வருக என மாண்புடன் தலைவி உரைப்பதும் ஆகிற்று. 

நறுமணமிகுந்த குவளை மலருடன் மணமில்லாத நெய்தல் மலரும் ஒப்பாக விளங்கும் ஊரன் எனத் தலைவனைத் தோழியர் வாழ்த்துவது, நற்பண்புமிக்க தலைவியையும் காமப் பரத்தையரையும் ஒன்றாக எண்ணும் தலைவனை இடித்துரைப்பதேயாகும் என்க.