மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 4


வாழி யாதன் வாழி யவினி 

பகைவர்புல் லார்க பார்ப்பா ரோதுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் 

கழனி யூரன் மார்ப 

பழன மாகற்க வெனவேட் டோமே. 


துறையும் விளக்கமும் : (முதற் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)


அருஞ்சொற்பொருள்

புல் – புல்லரிசி; 

ஆர்க - உண்பாராக; 

பழனம் – ஊர்ப் பொது நிலம்; 

கழனி – வரப்பிடப்பட்ட விளைநிலம். 


உரை : சேரமன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் வாழ்க என்றும், சேர மன்னன் ஆதனவினி வாழ்க என்றும், நாட்டின் பகைவேந்தர் காடுகளிலேபோய் ஒளிந்துகொண்டு புல்லரிசி உணவை உண்பாராக என்றும், அந்தணர்கள் மறைகளை ஓதுவார்களாக என்றும் விரும்பியவள் எம் பெருமானாட்டி. இதனால், அவள் உனது கொடுமையை மறைத்து நிற்பவளானாள் என்க. 

ஆனால், தோழியராகிய நாங்களோ வறிதே பூத்துள்ள கரும்பினையும் காய்த்துப் பயன்தரும் நெல்லினையும் ஒருங்கேயுடைய சிறந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமானின் மார்பு, ஊர்ப்பொது நிலமாகிய பழனம் போன்று பலர்க்கும் பொதுவாகாமல், எம்பெருமாட்டிக்கே சிறந்த உரிமை உடையதாகுக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


சிறப்புரை : பகைவர் புல் ஆர்க என்றது பகைமன்னர்கள் தோற்றோடிக் காடுகளில் மறைந்து வாழ்ந்து அங்கே கிடைக்கும் புல்லிய புல்லரிசையை உண்டு உயிர்த்திருப்பாராக என்றவாறாம். இதனால் கூறியது, நமது நாடு பகை அச்சமின்றி வாழ்வதாக எனும் அவா குறித்ததாம். மேலும், ஒரு மன்னனை வாழ்த்தும்போது அவனது பகை வீழ்க என்று கூறி வாழ்த்துவது வழக்கமுண்மையாகும் என்பதுமாம். 

இனி அருமையோர், நூலோதுதலால் நாடெல்லாம் நலன் எய்தி நம்நாடு மேம்படுக என்று விரும்புதல் தலைவிக்கு மாண்பாயிற்றென்க. 

இனி, பூத்துப் பயன்படாத கரும்பும், காய்த்துப் பயன் தரும் நெல்லும் ஒருங்கேயுடைய கழனியூரன் என்றது, மகப்பெற்றுச் சிறவாத காமவின்பம் நல்கும் பரத்தையரையும், மகப்பேறும் இம்மை மறுமை வீடும் ஆகிய முப்பெரும் பயனும் நல்கும் குலமகளாகிய தலைவியையும் சமமாகக் கருதி நிற்கும் தலைவனை இடித்துரைப்பதாம்.