மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 1




வாழி யாதன் வாழி யவினி 

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க 

வெணவேட் டோளே யாயே யாமே 

நனையக் காஞ்சிச் சினைய சிறுமீன் 

யாண ரூரன் வாழ்க 

பாணனும் வாழ்க வெனவேட் டேமே 


துறையும் விளக்கமும் : :தலைவன் தன் தலைவியைப் பிரிந்து, பரத்தை ஒழுக்கம் கொண்டு, பின் தீதெனத் தானே தெளிந்தவனாய்த் தன்னில்லம் புகும்போது, தலைவியின் மன நிலையை அறிந்துகொள்ளத் தோழியிடம் வினவுகிறான். தோழி பதில் கூறுவதே இப்பாடல். தொல்காப்பிய நூற்பாவின்கண் வரும்“பேணா வொழுக்கம் நாணிய பொருளினும்” எனவரும் விதியைப் பொருந்திக் கொள்க. இதற்குக் கைகோள் கற்பு. அதாவது இதன் களவொழுக்கம் ‘கற்பு’ என்பதாம்.


அருஞ்சொற்பொருள்

ஆதன் - செல்வக் கடுங்கோ வாழியாதன் எனும் சேரர்குடித் தலைவன்

அவினி - வாழியாதனின் மகன் அவினி எனும் சேர மன்னன்

யாய் – எம்பெருமாட்டி

பொலிக – விளைக

பொன் – செல்வம்

வேட்டோள் – விரும்பியிருந்தாள்

நனைய – மலர்களையுடைய

காஞ்சி – காஞ்சி மரம்

சினைய – முட்டைகளையுடைய

யாணர் – புதிது புதிதாகச் செல்வம் வந்து சேர்தல்

பாணன் – தலைவனுக்கு உறுதுணையாகத் தூது செல்லும் பாணன்

வேட்டேம் – விரும்பியிருந்தோம்.  


உரை : “ஆதனும் அவினியும் வாழிய! நெல்லும் பொன்னும் மிகுந்து சிறப்புறட்டும்” என விரும்பி நின்றவள் எம் தலைவி. நானும் தலைவியின் தாயும், “மலருடைய காஞ்சியும் சினையுடைய சிறுமீனும், நல்வருவாயும் உடைய ஊரினனே, நீ வாழிய! பாணனும் வாழிய’ என விரும்பி நின்றோம். 


உரைவிளக்கம் : தலைவனின் குறையைப் பிறர் அறியவிடாது மறைத்த நற்பண்பினள் தலைவி. மன்னனை வாழ்த்தி, நெல்லும் பொன்னும் பெருக வேண்டுமென விரும்புகிறாள். என்னை? 

 “அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்பும் சிறவாது” சிலப்பதிகாரம் ஆம்! முறைமை பேணும் நல்லரசில் பெண்டிற் கற்பும் சிறப்பாகப் பேணப்படும் என்பதாம். மேலும், நெல்லும் பொன்னும் பெருக விரும்பியதன் காரணம், உண்டி கொடுத்தலும் பொன் வழங்குதலும் இல்லறத்தின் விருந்தோம்பல் குணம் என்பதாம்.

 தலைவி இவ்வாறிருக்க, தோழியும் அன்னையும் ‘தலைவன் நலமுடன் வாழவேண்டும்’ என்று விரும்பியதாகக் கூறுகிறாள். அதே வேளையில் தோழி கூறும் கூர்மிகு சொற்களைக் காணுங்கள். ‘நனையக் காஞ்சிச் சினைய சிறுமீன்’ ‘மலரும் மீனும் ஒருங்கே விளையும் ஊரனென்று குறிப்பிட்டு குலமகளிரையும் பொதுமகளிரையும் ஒப்புக்கொண்டு ஒழுகும் குணமுடையவன்’ என இடித்துரைக்கவும் தவறவில்லை.  

இறுதியில் முத்தாய்ப்பாக, ‘பாணனும் வாழ்க’ என்று கூறுகிறாள். நல்லோரும் வள்ளண்மை உள்ளோரும் கண்டு வாழ்த்துவது பாணர் மரபு. ‘பாணர் வாழ்க’ என்பது, பாணர் வாழ்ந்து உன்னையும் வாழ்த்துமாறு இசைபெற நீ வாழ்வாயாக என்பதும் அறிவுறுத்தல்தானே.