வாழி யாதன் வாழி யவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
வெனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூங்கஞ லூரன் சூளிவண்
வாய்ப்ப தாக வெனவேட் டேமே.
துறை விளக்கம் : ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும்.
சொற்பிரிப்பு :
களவில் லாகுக – களவு இல்லாகுக
மாஅத் தணிமயி லிருக்கும் – மா அத்து அணி மயில் இருக்கும்
பூக்கஞலூரன் – பூக் கஞல் ஊரன்
சூளிவண் – சூள் இவண்
அருஞ்சொற்பொருள் :
அரசு – வேந்தன், அரசியல்.
முறை – முறைமை, செங்கோன்மை
அலங்கு – அசைதல்
சினை – கிளை (மரக்கிளை)
மா – மாமரம்
அத்து – அதன்கண்
அணி மயில் – அழகு மயில்
கஞல் – செறிந்த
சூள் – சூண்மொழி, சூளுரை
இவண் – இப்பொழுது
உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், செங்கோன்மையொடு அரசன் ஆட்சி புரிவானாக என்றும், களவு முதலிய வஞ்சநெறிகள் நாட்டில் இல்லாதவனவாக ஆகுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. யாங்களோ, அசைகின்ற கிளைகளையுடைய மாமரத்தின்கண் அழகிய மயில் வீற்றிருத்தலுக்கு இடனான, மலர் செறிந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமானுடைய சூளுரை இப்பொழுதே வாய்ப்பதாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம்.
உரை விளக்கம் :
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – குறள் 541
செங்கோன்மையின் அளவீடுகளாக வள்ளுவர் கூறுவதை நோக்குக.
நடுவுநிலைமையோடு ஆட்சி புரிவதே செங்கோன்மை என்கிறார் வள்ளுவர். மேலும், களவு முதலிய தீமைகள் நாட்டில் இல்லாது ஒழிந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். ஆதலால், நாட்டின் நல்லாட்சியும் மக்களின் நல்வாழ்வும் விரும்புகின்ற தலைவியின் பண்பு இங்கே மாண்பாயிற்று என்க.
இனி, அசைகின்ற மாமரம் என்றது எம்பெருமானின் சுற்றம் கெழுமிய உயிரோட்டமுள்ள அறத்திருமனை என்றாயிற்று அணி மயில் இருக்கும் ஊரன் என்றதற்கு, அவ் வீட்டிற்கு விளக்காக எம்பெருமாட்டி வீற்றிருந்து அணி செய்வாளாக என்பது உள்ளுறை உவமம் ஆயிற்று எனக் கொள்க.
மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவாகுக யான் செலவுறு தகவே – (குறுந்தொகை 137 )
சூள், இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவன் தெய்வத்தை முன்னிறுத்தி, “தலைவியே உன்னை நான் பிரியேன். பிரிந்தால் அறப்பயனை இழந்தவனாவேன்” எனத் தலைவிக்கு உரைத்ததுவாம். ஈண்டுச் சூள் வாய்ப்பதாக என்பது எம்பெருமான் சூள் மொழிந்து ஆங்கே எம்பெருமாட்டியின் நன்மனம் புலம்பத் துறந்து போகாமல் எப்பொழுதும் எம்பெருமாட்டியோடு உறைவதாகுக என்று விரும்பினேம் என்றவாறு, மெய்ப்பாடும் பயனுமவை.