திணை அறிதல் :
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனத் திணை ஐந்து என்பது தமிழ் வழக்கு.
ஒரு செய்யுளின் திணையை அறிய விரும்பினால் அதன் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றும் வரும்பொழுது அதன் முதற்பொருளைக்கொண்டு திணையை அறிந்துகொள்ளவேண்டும். முதற்பொருள் வாராது கருவும் உரியும் வருமானால் அதன் கருப்பொருளைக்கொண்டும், உரிப்பொருள் மட்டுமே வருவதாயின் அதுவே திணையைக் குறிப்பது எனவும் கொள்ளவேண்டும். உரிப்பொருள் வாராத செய்யுள் இல்லை.
இவற்றுள், ஒரு நிலத்தில் ஏனை நிலத்துக்குரிய கருவும் உரியும் வருதலும் உண்டு. ஆனால், நிலம் மட்டும் நிரவி மாறி வருவதில்லை எனக் காண்க. அதாவது, முதற்பொருள் எவ்வகைத்தும் மாறுவதில்லை என்றுணர்தல் வேண்டும்.
மருதம்
முதற்பொருள் :
நிலம் : வேந்தன் மேய தீம்புனல் உலகம் எனப்படும் நீரும் நீர்சார்ந்த வைப்புமாகிய மருதநிலம்.
காலம்: அறுவகைப் பெரும் பொழுதுகளும், வைகறை எனும் சிறுபொழுதும் ஆம்.
கருப்பொருள் :
உணவு - செந்நெல், வெண்ணெல்
விலங்கு - எருமை, நீர்நாய்
மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி
பறவை - தாரா, நீர்க்கோழி
பறை - மணமுழவம், நெல்லரி கிணை
செய்தி - நடுதல், களைகட்டல், அரிதல், கடாவிடுதல்
யாழ் - மருதயாழ்
மலர் - தாமரை, கழுநீர்ப்பூ
நீர் - ஆற்றுநீர், மனைக்கிணறு, பொய்கை
ஊர் - ஊர்
மக்கள் - உழவர், உழத்தியர்
உரிப்பொருள் :
அக வொழுக்கம் ஐந்து என்பார்கள். அவை, புணர்தல், பிரித்தல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவாம்.
மருதத் திணைக்குரிய அக வொழுக்கம் 'ஊடலும் ஊடல் நிமித்தமுமாம்'.
நெய்தல்
முதற்பொருள் :
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நிலன்.
காலம்: அறுவகைப் பெரும்பொழுதும் மாலை எனும் சிறு பொழுதுமாம். இனி, சிறுபொழுதிணை எற்பாடு என்று தொல்காப்பியர் கூறுவார். எற்பாடு என்பதை கதிர் மறையும் மாலை எனவும் கதிர் தோன்றும் காலை எனவும் இரு வேறாகக் கூறுவர் புலவோர். மாலை என்பதே பெரு வழக்காம்.
கருப்பொருள் :
தெய்வம் - வருணன்
உணவு - மீன்
விலங்கு - உமன் பகடு போல்வன
மரம் - புன்னை, ஞாலல், கண்டல்.
பறவை - அன்னம், அன்றில்
பறை - மீன்கோட் பறை
செய்தி - மீன்படுத்தல், உப்பு விளைத்தல்
யாழ் - நெய்தல்யாழ்
மலர் - கைதை, நெய்தல்
நீர் - மணற்கிணறு, உவர்க்குழி
ஊர் - பட்டினம், பாக்கம்
உரிப்பொருள் :
அகவொழுக்கம் ஐந்தனுள் இரங்குதல் எனும் ஒழுக்கமே நெய்தல் திணைக்கு உரியவாம்.
குறிஞ்சி
முதற்பொருள் :
நிலம் - மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது - கூதிரும் முன்பனியும் ஆகிய பெரும்பொழுதும்; யாமம் ஆகிய சிறுபொழுதும்.
கருப்பொருள் :
உணவு - ஐவனநெல், திணை, மூங்கிலரிசி
விலங்கு - புலி, யானை, பன்றி, கரடி.
மரம் - அகில், ஆரம், தேக்கு, திமிசு, வேங்கை
பறவை - கிளி, மயில்.
பறை - முருகியம், தொண்டகம்
தொழில் - தேனழித்தல், கிழங்கு அகழ்தல், தினை விளைத்தல், கிளி கடிதல்
யாழ் - குறிஞ்சியாழ்
மலர் - காந்தள், வேங்கை, சுனைக்குவளை.
நீர் - அருவி, சுனை
ஊர் - சிறுகுடி, குறிச்சியும்
மாக்கள் - குறவர், குறத்தியர், எயினர், எயிற்றியர்
தலைமக்கள் - வெற்பன், சிலம்பன், கொடிச்சி
உரிப்பொருள் :
புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாம்.
பாலை
முதற்பொருள்
நிலம் - வடவேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்தே இயற்கையில் பாலைநிலம் என்பது இல்லை. இல்லையாயினும், மழையில்லாது தமக்குரிய நல்லியல்பு கெட்டு உயிரினத்தை வருத்தும் வெப்பம் மிக்கனவாகிய முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையுமே பாலைநிலமாகக் கொள்வர்.
காலம் - இளவேனிலும் முதுவேனிலும் பாலைக்குரிய பெரும் பொழுதுகள். பின்பனிப் பருவமும் பாலைக்கு வருவதுண்டு. நண்பகல் சிறுபொழுதென்க.
கருப்பொருள் :
உணவு - ஆறலைத்தன (வழிப்பறி), சூறை கொண்டன.
விலங்கு - வலியழிந்த யானையும், புலியும் செந்நாயும்
மரம் - வற்றின இருப்பை, ஓமை, உழிஞை, ஞெமை.
பறவை - கழுகு, பருந்து, புறா.
பறை - குறைகோட்பறை, நிறைகோட்பறை
தொழில் - ஆறலைத்தல், சூறை கோடல்
யாழ் - பாலையாழ்
மக்கள் - மீளி விடலை எயிற்றி பேதை, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
மலர் - மரா, குரா, பாதிரி ஆகியவற்றின் பூக்கள்
நீர் - அறுநீர்க் கூவலும், அறுநீர்ச் சுனையும்
ஊர் - கொல்குறும்பு
உரிப்பொருள் :
பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாம்
முல்லை
முதற்பொருள்
நிலம் - காடும் காடு சார்ந்த நிலப் பகுதியாம்.
காலம் - கார்காலமும் மாலைப் பொழுதுமாம்.
கருப்பொருள் :
தெய்வம் - திருமால்
உணவு - வரகு, சாமை
விலங்கு - முயல், சிறுமான்
மரம் - கொன்றை, குருந்து
பறவை - கானாங்கோழி, மயில், சிவல் (கௌதாரி, காடை வகை)
பறை - ஏறுகோட்பறை, முரசு
தொழில் - வரகு களைகட்டல், அவற்றை அறுத்தல், கடா விடுதல், ஆநிரை மேய்த்தல், ஏறுகோடல்
யாழ் - முல்லையாழ்
தலைவன் - குறும்பொறை நாடன்
தலைவி - கிழத்தி, மனைவி
மலர் - முல்லை, தோன்றி
நீர் - கான்யாறு
ஊர் - பாடி, சேரி
மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
உரிப்பொருள் :
இருத்தலும் அதன் நிமித்தமுமாம்