மருதம் - வேட்கைப் பத்து பாடல் 5

 


வாழி யாதன் வாழி யவினி

பசியில் லாகுக பிணிசே ணீங்குக 

வெனவேட் டோளே யாயே யாமே 

முதலைப் போத்து முழுமீ னாரும் 

தண்டுறை யூரன் றேரெம் 

முன்கடை நிற்க வெனவேட் டேமே. 


துறையும் விளக்கமும் : இதுவுமது. முதற் பாடலில் கூறிய வண்ணமே.


அருஞ்சொற்பொருள் : 

பிணி – பசிப்பிணி; 

சேண் நீங்குக – அண்மை எனும் நிலையில் நீங்குக; 

போத்து – நீர்வாழ் உயிர்களின் ஆண்; 

ஆரும் – உண்ணும்; 

முன்கடை – வீட்டு முன்றில். 


 உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும் அவினி மன்னன் நீடு வாழ்கவென்றும், பசி இல்லாது ஆகுக என்றும், பிணி தொலைவிற் சென்று கெடுக என்றும் விரும்பியவள் எம் பெருமாட்டி. அடிச்சியராகிய யாங்களோ, ஆண்முதலையானது தன்னோடு ஒருங்கு வாழும் முழுமையான மீனைத் தின்னுதற்கு இடனான குளிர்ந்த நீர்த்துறையினை உடைய சிறந்த ஊர்த்தலைவனாகிய எம்பெருமானது தேர் எம்முடைய வீட்டு முன்றிலிலேயே நிற்பதாக என்று பெரிதும் விரும்பியிருந்தேம் என்பதாம். 


விளக்கவுரை : பசி என்பதும் ஒரு பிணியே. அது உடலை வருத்தி உயிர்களை நலிவடையச் செய்வது. அப்பிணிக்கு ஆளாயினவர்கட்கு இம்மை, மறுமை, வீடு எனும் மூவகை இன்பமும் ஒருங்கே கெடுதல் ஒருதலையாம். மீண்டும் பிணி என உரைத்தது உட்பிணியும் புறப்பிணியுமாகிய இரு நோய்களைக் குறித்தது என்பதாம். 

 ‘உறுபசியும் ஓவாப் பிணியும்’ – குறள் 734 என்பதையும் இங்கே காண்க. 

இதனால், எல்லா உயிரும் இன்புற்றிருக்க விரும்பும் சான்றாண்மையுடைய தலைவிக்கு இவ்விருப்பங்கள் மாண்புடையதாயிற்று எனக் கொள்க. 

இனி, இதன்கண் முதலைப் போத்து முழுமீன் ஆரும் ஊரன் என்பது உள்ளுறை உவமமாம். அதாவது, முதலையானது தான் வாழும் நீரிலேயே உடன் வாழும் மீனைக் கண்ணோட்டமின்றிக் கொன்று தின்பதுபோல் நீயும் உன்னுடன் உறைந்து வாழும் எம்பெருமாட்டியின்பால் கருணை சிறிதும் இன்றி பெரிதும் துன்புறச் செய்தாயே என எடுத்துக் காட்டுவதாகலின் என்க. 

முதலை என வெறுமே கூறாமல் முதலைப் போத்து என்றது ஆண்முதலை எனும் பொருள் தோன்றி நிற்பதைக் காண, அது ஆண்மகனைக் குறிக்க வந்தது என்பதும் நோக்குக. 

எம் முன்றிலில் நின் தேரானது நிற்கட்டும் என்றது, பரத்தையர் முன்றில்தோறும் சென்று நில்லாது எம்முடைய பெருமாட்டியின் முன்றிலில் மட்டுமே நிற்பதாக என்பதுபட நின்றது. இது ‘மெய்ப்பாடும் பயனும்’ குறிப்பதாம்.