மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 10

 


வாழி யாதன் வாழி யவினி 

மாரி வாய்க்க வளகனி சிறக்க 

வெனவேட் டோளே யாயே யாமே 

பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் 

தண்டுறை யூரன் றன்னோடு 

கொண்டனன் செல்க வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : 

ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும்.


சொற்பிரிப்பு

மாஅத்து – மா அத்து; 

புலாலஞ் சிறுமீன் – புலால் அம் சிறுமீன்; 

ஊரன் றன்னொடு – ஊரன் தன்னொடு.


அருஞ்சொற்பொருள்

மாரி – மழை; 

வாய்க்க – வாய்ப்பதாக, தப்பாமல் பொழிவதாக; 

மா அத்து – மாமரத்தையுடைய. 


உரை

ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், நாட்டின்கண் மழை காலந் தப்பாமல் பொழிவதாக என்றும், வளமனைத்தும் மிகச் சிறந்து விளங்கட்டும் என்றும் விரும்புபவள் எம்பெருமாட்டி. யாங்களோ, மலர்ந்து மணங்கமழும் மாமரப் பொழிலையும் புலால் மணம் வீசும் சிறிய மீன்களையும் உடைய குளிர்ந்த நீர்த்துறை அமைந்த சிறந்த ஊரினது தலைவனாகிய எம்பெருமான் எம்பெருமாட்டியைத் தன்னொடு தன் ஊர்க்கு அழைத்துக்கொண்டு செல்வானாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


உரை விளக்கம்

மாரி வாய்த்தலாவது மிகையும் குறைவுமின்றிப் மழை பெய்தல் என்பதாம்.  அறம் பொருள் இன்பம் நடத்தற்கேதுவாக இருப்பது மழை. அம் மழையின்றி நாட்டோர்க்கு யாதும் உறுதியில்லையாகலின் மாரி வாய்க்கவென வேண்டுதல் தலைவிக்கு மாண்பாயிற்று என்க. வளம் என்றது மழைவளம் மிகுதலினால் உண்டாகும் உணவு முதலியவற்றின் பெருக்கமாம். 

குளிர்ந்த துறையின்கண் மலர்ந்து மணங்கமழும் மாமரத்தையும் புலால் நாறும் சிறுமீனையும் ஒருங்கே உடைய ஊர் என்பது அகமலர்ந்து வரவேற்கும் தலைவியும் தோழியருமாகியோரும், பிற பழிதூற்றும் சிறுபுன்மாக்களும் உடைய ஊர் என்பதாம். அதனால், தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் எனும் தோழிகளின் விருப்பம் குறிப்பாயிற்று என்க. மெய்ப்பாடும் பயனும் அவை. 


இலக்கணம் : அம் – இசைநிறை

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 9





வாழி யாதன் வாழி யவினி 

நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

கயலார் நாரை போர்விற் சேக்குந் 

தண்டுறை யூரன் கேண்மை 

யம்ப லாகற்க வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : 

ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும். 


சொற்பிரிப்பு : 

தீதில் லாகுக – தீது இல்லாகுக 

கயலார் நாரை – கயல் ஆர் நாரை 

போர்விற் சேக்குந் – போர்வில் சேக்கும் 

யம்ப லாகற்க – அம்பல் ஆகற்க


அருஞ்சொற்பொருள் : 

நன்று – நன்மையானவை 

கயல் – கயல் எனும் மீன் 

ஆர் – தேராந்து உண்ணுதல் 

போர்வு - நெற்போர்வு 

சேக்கும் – தங்கும் 

தண்டுறை – குளிர்ந்த நீர்த்துறை 

கேண்மை – நட்பு, உறவு, காதலுறவு 

அம்பல் – பழிமொழி, புறங்கூற்று, சிலர் அறிந்த பழிதூற்றுகை, 


உரை : 

ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், நாட்டின் நன்மையான அனைத்தும் பெரிதாய்ச் சிறப்புறுக என்றும், தீங்கு தருவன எல்லாம் முழுவதும் தேய்ந்து இல்லையென ஆகுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. அடிச்சியராகிய யாங்களோ, கயல்மீனைத் தேர்ந்துண்ட நாரைகள் நெற்போர்வின்கண் இனிதே உறைதற்கு இடனான குளிர்ந்த நீர்த்துறையமைந்த சிறந்த ஊர்த்தலைவனாகிய எம்பெருமான் எம்பெருமாட்டியின்பால் கொண்டுள்ள காதலுறவு ஒரு சிலரே அறிந்து பழிதூற்றுமளவும்கூட ஆகாதொழிக என்று பெரிதும் வேண்டியிருந்தோம். 


உரை விளக்கம் : 

நன்று, தீது என்பதற்கு விளக்கமாக அறவினை, தீவினை எனக் கொள்ளுதல் மிகப் பொருந்துவனவாம். கயல் ஆர் நாரை என்பதனைக் களவின்பம் துய்த்தலை உடைய தலைவன் தலைவி இருவர்க்கும் உவமையாகக் கொள்க. 

மருதநிலக் கழனியில் கயலமீன்களைத் தேர்ந்து உண்ட நாரையானது வைக்கோற்போர் அடைந்துள்ள இடத்தை நாடிச் சென்று இனிதே உறங்குதல் இயற்கை. அதுபோல, களவு நெறியாலே காலமும் இடனுந் தேர்ந்து இன்பம் நுகர்ந்த தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து தம் இல்லத்தே சேர்ந்து இனிது உறைதல் வேண்டும் என தோழியர் விரும்புவது ‘குறிப்புப் பொருள்’ பொதிந்துள்ளது என்க. 

சிலரும் பலரும் கடைக்க ணோக்கி 

மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி 

மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற – நற்றிணை 149 

அம்பல் எனும் பழிதூற்றுதலை நற்றிணை கூறும் விளக்கம், அலர் தூற்றலின்போது பெண்கள் செய்யும் உடற் பாவனைகளை மிகத் தெளிவாக உணர்த்தும் சொற்சித்திரமாம். அத்தகைய பழிதூற்றலுக்கும் பொறாதவள் தலைவி என்பதால் ‘அம்பல் ஆகற்க’ எனத் தோழிகள் வேண்டி நிற்பது கருத்து என்க.


இலக்கணம் : 

ஆர்நாரை – வினைத்தொகை 

நன்றுபெரி(து) – ஆசிரியப் பாவில் கனிச்சீர் வரலாகாது. ஆதலால், கடையெழுத்தாக வரும் குற்றியலுகரத்தை அலகிடாமல் கூவிளங்காய் ஆகக் கொள்ளவேண்டும்.


மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 8

 


வாழி யாதன் வாழி யவினி 

அரசுமுறை செய்க களவில் லாகுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும் 

பூங்கஞ லூரன் சூளிவண் 

வாய்ப்ப தாக வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும். 


சொற்பிரிப்பு : 

களவில் லாகுக – களவு இல்லாகுக 

மாஅத் தணிமயி லிருக்கும் – மா அத்து அணி மயில் இருக்கும் 

பூக்கஞலூரன் – பூக் கஞல் ஊரன் 

சூளிவண் – சூள் இவண் 


அருஞ்சொற்பொருள் : 

அரசு – வேந்தன், அரசியல். 

முறை – முறைமை, செங்கோன்மை 

அலங்கு – அசைதல் 

சினை – கிளை (மரக்கிளை) 

மா – மாமரம் 

அத்து – அதன்கண் 

அணி மயில் – அழகு மயில்  

கஞல் – செறிந்த 

சூள் – சூண்மொழி, சூளுரை 

இவண் – இப்பொழுது 


உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், செங்கோன்மையொடு அரசன் ஆட்சி புரிவானாக என்றும், களவு முதலிய வஞ்சநெறிகள் நாட்டில் இல்லாதவனவாக ஆகுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. யாங்களோ, அசைகின்ற கிளைகளையுடைய மாமரத்தின்கண் அழகிய மயில் வீற்றிருத்தலுக்கு இடனான, மலர் செறிந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமானுடைய சூளுரை இப்பொழுதே வாய்ப்பதாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


உரை விளக்கம் : 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 

தேர்ந்துசெய் வஃதே முறை – குறள் 541

செங்கோன்மையின் அளவீடுகளாக வள்ளுவர் கூறுவதை நோக்குக. 

நடுவுநிலைமையோடு ஆட்சி புரிவதே செங்கோன்மை என்கிறார் வள்ளுவர். மேலும், களவு முதலிய தீமைகள் நாட்டில் இல்லாது ஒழிந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். ஆதலால், நாட்டின் நல்லாட்சியும் மக்களின் நல்வாழ்வும் விரும்புகின்ற தலைவியின் பண்பு இங்கே மாண்பாயிற்று என்க. 

இனி, அசைகின்ற மாமரம் என்றது எம்பெருமானின் சுற்றம் கெழுமிய உயிரோட்டமுள்ள அறத்திருமனை என்றாயிற்று அணி மயில் இருக்கும் ஊரன் என்றதற்கு, அவ் வீட்டிற்கு விளக்காக எம்பெருமாட்டி வீற்றிருந்து அணி செய்வாளாக என்பது உள்ளுறை உவமம் ஆயிற்று எனக் கொள்க. 

மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப 

நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் 

திரவலர் வாரா வைகல் 

 பலவாகுக யான் செலவுறு தகவே – (குறுந்தொகை 137 ) 

சூள், இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைவன் தெய்வத்தை முன்னிறுத்தி, “தலைவியே உன்னை நான் பிரியேன். பிரிந்தால் அறப்பயனை இழந்தவனாவேன்” எனத் தலைவிக்கு உரைத்ததுவாம். ஈண்டுச் சூள் வாய்ப்பதாக என்பது எம்பெருமான் சூள் மொழிந்து ஆங்கே எம்பெருமாட்டியின் நன்மனம் புலம்பத் துறந்து போகாமல் எப்பொழுதும் எம்பெருமாட்டியோடு உறைவதாகுக என்று விரும்பினேம் என்றவாறு, மெய்ப்பாடும் பயனுமவை.   

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 7

 


வாழி யாதன் வாழி யவினி 

அறநனி சிறக்க வல்லது கெடுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

யுளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்குந் 

தண்டுரை யூரன் றன்னூர்க் 

கொண்டனன் செல்க வெனவேட் டேமே. 


துறை விளக்கம் : ஆறாம் செய்யுளின் விளக்கமே பொருந்தும். 


அருஞ்சொற்பொருள் : 

 யாய் - எம்பெருமாட்டி 

அறம் – அன்பு முதலிய நல்லறங்கள் 

நனி – மிகுதி 

அல்லது – தீயது 

உளைப் பூ – உள் துளையுள்ள பூ 

கிளை – இனம் 

குருகு – வெள்ளாங்குருகு எனும் பறவை

தண்டுறை – குளிர்ந்த துறை 

ஊர்க் கொண்டனன் – ஊரினைத் தனது எனக் கொண்டவன் (முற்றெச்சம்) 


உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும், அவினி மன்னன் புகழ் வாழ்க என்றும், அறம் பெரிதும் சிறக்க என்றும், தீவினைகள் முழுதும் கெட்டொழிக என்றும் பெரிதும் விரும்பியவள் எம்பெருமாட்டி. யாங்களோ, உளையுள்ள மலரினையுடைய மருதமரத்தின்கண் தன் இனத்தோடு வாழும் குருகுகள் இருத்தற்கிடனானதும் குளிர்ந்த நீர்த்துறையினை உடையதும் ஆகிய ஊரினைத் தனதாகக் கொண்டவனாகிய எம்பெருமான் தன்னூர்க்கு எம்பெருமாட்டியை அழைத்துச் செல்வானாக என்று விரும்பியிருந்தேம். 


உரை விளக்கம் : “அறநனி சிறக்க அல்லது கெடுக” எனும் வரிகளை நோக்குக. 

அல்லவை தேய அறம்பெருகும்; 

நல்லவை நாடி இனிய சொலின் – குறள் 96  

தீயவை தேய்ந்து அழிதலும் அறம் பெருகி நிறைதலும் நாடி கூறப்படும் இனிய சொல்லை எடுத்துரைக்கும் திருக்குறள் மொழியே இங்கு உயர்குடிப் பிறந்த தலைவிக்கும் மாண்பாயிற்று எனக் காண்க. தனக்கு இயல்பான நற்பண்புகளையே காட்டித் தலைவனது பிரிவால் ஏற்பட்ட துயரத்தை சதுரப்பாட்டோடு மறைத்தனளாக அவளது நல்லியற் பொறையின் மாண்பினைத் தோழி நவின்றமை குறிப்பெச்சம் என்க. 

உளைப்பூவுடைய மருதத்தின்கண் குருகு தன் இனத்தோடிருந்து இன்புறுமாறுபோல, பெருமான் தனது பொலிவுடைய இல்லத்தின்கண் தம் பெருமாட்டியோடு இனிதிருந்து இல்லறம் நிகழ்த்தவேண்டும் என்பது ‘எம்மனோர் வேணவா’ எனும் உள்ளுறுத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை. 

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 6

 


வாழி யாதன் வாழி யவினி 

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக 

என வேட்டோளே யாமே யாமே 

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை 

தண்டுறை யூரன் வரைக

எந்தையும் கொடுக்க வெனவேட் டோமே. 


துறை விளக்கம் : 

தலைவன், களவின்பமே பெரிதும் விரும்பித் தலைவியை மணம் செய்து உரிமையாக்கிக் கொள்ளும் எண்ணம் இன்றி ஒழுகி வந்தான். பின்னர் தோழியின் வற்புறுத்தலால் மணம் செய்து கொண்டான். ஒருநாள், தலைவன் தோழியை நோக்கி யான் மணந்துகொள்ளும் நாளை நீட்டித்து வந்த காலத்தே நீவிர் எவ்வாறு இருந்தீர் என்று வினவினான். அப்போது, தோழி தலைவனுக்கு உரைத்ததுவே இப்பாடல். 

களவுக் காலத்தே பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து மீண்டுவந்து தலைவியை உரிமையாக்கிக்கொண்ட தலைவன் தோழியிடம் பிரிவாற்றியிருந்த காலத்தே நீவிர் இருந்த முறைமைதான் என்னே எனக் கோடல் நிலைமை உணர்தல் குறித்தாம். 

இவற்றின்கண் யாங்கள், ஊரன் மணம்புரிய விளைக, எந்தையும் கொடுக்க என்றும் தெய்வத்தை வணங்கி நின்றோம் என்றும் வருதலின் இவ்வைந்து செய்யுட்கட்கும், "அற்றம் இல்லாக் கிழவோள் சுட்டிய தெய்வம் கடத்தினும்" என வரும் விதி கொள்க. களவொழுக்கம் எனும் வருத்தம் தீர்ந்து இல்லாதாக்கிய தெய்வத்துக்கு நன்றிக் கடன் செய்யுக எனத் தலைவனைச் சுட்டி அறிவுறுத்திய தலைவி என்பது பொருளாம். 


அருஞ்சொற்பொருள் : 

யாய் - எம்பெருமாட்டி; 

நந்துக - நீளுக; 

முகைந்த - அரும்பெடுத்த; 

தண்டுறை - குளிர்ந்த நீர்த்துறை; 

வரைக - திருமணம் புரிந்து உரிமையாக்கிக் கொள்க; 

வரைதல் - உரிமையாக்குதல், திருமணம் செய்தல்; 

வேட்டேம் - விரும்பினேம்.


உரை :  

ஆதன் வாழியென்றும், அவினி வாழியென்றும், வேந்தன் பகைமை தணிந்து அறநோக்குடையுடையவனாக என்றும், அவனது வாழ்நாள் நீளுக என்றும் விரும்பியவள் எம்பெருமாட்டி. அடிச்சியராகிய நாங்களோ, மலர்ந்த பொய்கைக்கு அணியாக விளங்கும்  முகைந்த தாமரையொடு குளிர்ந்த நீராடு துறையினை உடைய ஊர்த் தலைவனாகிய எம்பெருமான் விரைந்து வந்து எம்பெருமாட்டியை திருமணம் புரிந்து கொள்க என்றும், அவ்வாறு தலைவன் மகர் கேட்டுவரும் காலத்தே எம் தந்தையும் மறுக்காது உவந்து மகட்கொடை தருக என்றும் விரும்பித் தெய்வத்தை வணங்கி நின்றோம். 


உரைவிளக்கம் :

ஈண்டுத் தலைவியை 'யாய்' என்றது, தலைவனை எதிர்ப்பட்ட அன்றே தலைவன் தன்னை மணஞ் செய்தான் எனக்கொண்டு தலைவியானவள் கற்பு பூண்டொழுகி நின்ற காரணத்தால் ஆம். 

வேந்து பகை தணிக என்றது, பகை தணிந்தால்தான் அறம் சீராக வளரும் என்பதால் ஆம். 

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 

கொல்குறும்பும் இல்லது நாடு" எனும் குறட்பாவையும் (735) இங்கே மனத்தில் கொள்க. 

'வேந்து பகை தணிக, வேந்தன் வாழ்நாள் நீள்க' என்றது அத்தகைய அறநோக்குடைய மன்னன் வாழ்நாள் நீளுக என்றும், தனது இயல்பான மனத்தினால் தலைவனைப் பிரிந்து வாழும் துயரத்தை நன்கு மறைத்து உறைவாளாயினள் என்றும் பொருள்படவாம். 

இனி, அரசன்தான் மக்கட்குக் கண்ணால் காணும் கடவுள் என்பதால் அவனைப் பல்லாண்டு கூறி வாழ்த்துதல் சான்றோர் செயலாயிற்று. இதனால், இவையும் தலைவியின் மாண்பாயிற்று என்க. 

இனி, சிறந்த குடியிற் பிறந்த எம்பெருமானாகிய நீ எம் தலைவியை வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்துகொண்டனை. அவளும் அறவாழ்க்கைகே பொருந்தி நின்றாள். அதனால், தலைவியை விரைந்தே மணமுடித்துப் பல்லாண்டு வாழவேண்டும் எனக் குறிப்புடையேம் என்பது உள்ளுறை பொருளையுடையது என்க. 

ஊரன் வரைக, எந்தையும் கொடுக்க எனத் தெய்வத்தை வணங்கி நின்றோம் என்பது தோழியர் கூற்று. இதன்கண், தலைவி பிரிவினால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பிறர் அறிய நேர்ந்தால் பழியுண்டாகும் என்பதால் அதனை மறைத்து வாழ்ந்தாள் என்பது குறிப்பெச்சம். இதனால் தலைவியின் பொறைநலம் தலைவனுக்கு உணர்த்தப்பட்டது என்க. மெய்ப்பாடும் பயனும் அது.  


மருதம் - வேட்கைப் பத்து பாடல் 5

 


வாழி யாதன் வாழி யவினி

பசியில் லாகுக பிணிசே ணீங்குக 

வெனவேட் டோளே யாயே யாமே 

முதலைப் போத்து முழுமீ னாரும் 

தண்டுறை யூரன் றேரெம் 

முன்கடை நிற்க வெனவேட் டேமே. 


துறையும் விளக்கமும் : இதுவுமது. முதற் பாடலில் கூறிய வண்ணமே.


அருஞ்சொற்பொருள் : 

பிணி – பசிப்பிணி; 

சேண் நீங்குக – அண்மை எனும் நிலையில் நீங்குக; 

போத்து – நீர்வாழ் உயிர்களின் ஆண்; 

ஆரும் – உண்ணும்; 

முன்கடை – வீட்டு முன்றில். 


 உரை : ஆதன் புகழ் வாழ்க என்றும் அவினி மன்னன் நீடு வாழ்கவென்றும், பசி இல்லாது ஆகுக என்றும், பிணி தொலைவிற் சென்று கெடுக என்றும் விரும்பியவள் எம் பெருமாட்டி. அடிச்சியராகிய யாங்களோ, ஆண்முதலையானது தன்னோடு ஒருங்கு வாழும் முழுமையான மீனைத் தின்னுதற்கு இடனான குளிர்ந்த நீர்த்துறையினை உடைய சிறந்த ஊர்த்தலைவனாகிய எம்பெருமானது தேர் எம்முடைய வீட்டு முன்றிலிலேயே நிற்பதாக என்று பெரிதும் விரும்பியிருந்தேம் என்பதாம். 


விளக்கவுரை : பசி என்பதும் ஒரு பிணியே. அது உடலை வருத்தி உயிர்களை நலிவடையச் செய்வது. அப்பிணிக்கு ஆளாயினவர்கட்கு இம்மை, மறுமை, வீடு எனும் மூவகை இன்பமும் ஒருங்கே கெடுதல் ஒருதலையாம். மீண்டும் பிணி என உரைத்தது உட்பிணியும் புறப்பிணியுமாகிய இரு நோய்களைக் குறித்தது என்பதாம். 

 ‘உறுபசியும் ஓவாப் பிணியும்’ – குறள் 734 என்பதையும் இங்கே காண்க. 

இதனால், எல்லா உயிரும் இன்புற்றிருக்க விரும்பும் சான்றாண்மையுடைய தலைவிக்கு இவ்விருப்பங்கள் மாண்புடையதாயிற்று எனக் கொள்க. 

இனி, இதன்கண் முதலைப் போத்து முழுமீன் ஆரும் ஊரன் என்பது உள்ளுறை உவமமாம். அதாவது, முதலையானது தான் வாழும் நீரிலேயே உடன் வாழும் மீனைக் கண்ணோட்டமின்றிக் கொன்று தின்பதுபோல் நீயும் உன்னுடன் உறைந்து வாழும் எம்பெருமாட்டியின்பால் கருணை சிறிதும் இன்றி பெரிதும் துன்புறச் செய்தாயே என எடுத்துக் காட்டுவதாகலின் என்க. 

முதலை என வெறுமே கூறாமல் முதலைப் போத்து என்றது ஆண்முதலை எனும் பொருள் தோன்றி நிற்பதைக் காண, அது ஆண்மகனைக் குறிக்க வந்தது என்பதும் நோக்குக. 

எம் முன்றிலில் நின் தேரானது நிற்கட்டும் என்றது, பரத்தையர் முன்றில்தோறும் சென்று நில்லாது எம்முடைய பெருமாட்டியின் முன்றிலில் மட்டுமே நிற்பதாக என்பதுபட நின்றது. இது ‘மெய்ப்பாடும் பயனும்’ குறிப்பதாம்.   

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 4


வாழி யாதன் வாழி யவினி 

பகைவர்புல் லார்க பார்ப்பா ரோதுக 

வெனவேட் டோளே யாயே யாமே 

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற் 

கழனி யூரன் மார்ப 

பழன மாகற்க வெனவேட் டோமே. 


துறையும் விளக்கமும் : (முதற் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)


அருஞ்சொற்பொருள்

புல் – புல்லரிசி; 

ஆர்க - உண்பாராக; 

பழனம் – ஊர்ப் பொது நிலம்; 

கழனி – வரப்பிடப்பட்ட விளைநிலம். 


உரை : சேரமன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் வாழ்க என்றும், சேர மன்னன் ஆதனவினி வாழ்க என்றும், நாட்டின் பகைவேந்தர் காடுகளிலேபோய் ஒளிந்துகொண்டு புல்லரிசி உணவை உண்பாராக என்றும், அந்தணர்கள் மறைகளை ஓதுவார்களாக என்றும் விரும்பியவள் எம் பெருமானாட்டி. இதனால், அவள் உனது கொடுமையை மறைத்து நிற்பவளானாள் என்க. 

ஆனால், தோழியராகிய நாங்களோ வறிதே பூத்துள்ள கரும்பினையும் காய்த்துப் பயன்தரும் நெல்லினையும் ஒருங்கேயுடைய சிறந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமானின் மார்பு, ஊர்ப்பொது நிலமாகிய பழனம் போன்று பலர்க்கும் பொதுவாகாமல், எம்பெருமாட்டிக்கே சிறந்த உரிமை உடையதாகுக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


சிறப்புரை : பகைவர் புல் ஆர்க என்றது பகைமன்னர்கள் தோற்றோடிக் காடுகளில் மறைந்து வாழ்ந்து அங்கே கிடைக்கும் புல்லிய புல்லரிசையை உண்டு உயிர்த்திருப்பாராக என்றவாறாம். இதனால் கூறியது, நமது நாடு பகை அச்சமின்றி வாழ்வதாக எனும் அவா குறித்ததாம். மேலும், ஒரு மன்னனை வாழ்த்தும்போது அவனது பகை வீழ்க என்று கூறி வாழ்த்துவது வழக்கமுண்மையாகும் என்பதுமாம். 

இனி அருமையோர், நூலோதுதலால் நாடெல்லாம் நலன் எய்தி நம்நாடு மேம்படுக என்று விரும்புதல் தலைவிக்கு மாண்பாயிற்றென்க. 

இனி, பூத்துப் பயன்படாத கரும்பும், காய்த்துப் பயன் தரும் நெல்லும் ஒருங்கேயுடைய கழனியூரன் என்றது, மகப்பெற்றுச் சிறவாத காமவின்பம் நல்கும் பரத்தையரையும், மகப்பேறும் இம்மை மறுமை வீடும் ஆகிய முப்பெரும் பயனும் நல்கும் குலமகளாகிய தலைவியையும் சமமாகக் கருதி நிற்கும் தலைவனை இடித்துரைப்பதாம்.

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 3

வாழி யாதன் வாழி யவினி

பால்பல வூறுக பகடுபல சிறக்க 

வெனவேட் டோளே யாயே யாமே 

வித்திய வுழவர் நெல்லொடு பெயரும் 

பூக்கஞ லூரன் றன்மனை 

வாழ்க்கை பொலிக வெனவேட் டேமே. 


துறையும் விளக்கமும் : (முதல் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)


அருஞ்சொற்பொருள் : 
பால்பல ஊறுக – ஆன் முதலியனவற்றின் பால் மிகுதியாகச் சுரப்பனவாக; 
பகடு – எருமைக்கடா; 
வித்திய – விதையினை விதைத்த;
நெல்லொடு பெயரும் – கூலிக்கு உழவு செய்தோர் நெல்லோடு செல்லுதற்கு இடனான; 
பூ கஞல் – மலர் செறிந்த; 
வாழ்க்கை பொலிக - இல்லறம் பொலிவுபெற்றுச் சிறந்து விளங்குக.


உரை : சேரமன்னன் ஆதன் வாழ்க எனவும், அவனது மைந்தன் அவினி வாழ்க எனவும் வாழ்த்தியவள் எம் பெருமாட்டி. மேலும், ஆன் முதலியவற்றின் பால் மிகுதியாகச் சுரப்பனவாக எனவும், எருமைக் கடாக்கள் பலவாகப் பெருகிச் சிறக்கட்டும் எனவும் விரும்பியவள் எம்பெருமாட்டி. 
யாங்களோ, விதை விதைத்த உழவர் கூலியாக நெல்லைப் பெற்றுச் செல்லுதற்கு இடனான மலர்கள் செறிந்த சிறந்த ஊர்த் தலைவனாகிய எம்பெருமான் தன் இல்லக்கிழத்தியோடிருந்து இல்வாழ்க்கையின்கண் எவ்வாற்றானும் மேம்பட்டுப் பொலிவுறுக என்று பெரிதும் விரும்பியிருந்தேம். 


சிறப்புரை : பால்பெருக என்றது ஆன்பாலும் எருமைப் பாலும் ஆகியன மிகப் பெருகி இல்லத்தின்கண் அமைந்தோர் நலமுற்று வாழ்வதாகும். பகடுபல சிறக்க என்றது உழவுத் தொழிலுக்குத் தேவையான எருமைக் கடாக்கள் சிறப்பாக விளங்கி உழவுத் தொழில் சிறக்கட்டும் என்பதாம். பால்வளமும் பகட்டு வளமும் விருந்தோம்பல் பொருட்டுத் தலைவியால் விரும்பப்பட்டன என்பதே விளக்கம்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு – குறள் 81 
 என்பனவாகலான் அவ்வறத்திற்கு ஏதுவான இவற்றின் பெருக்கத்தை வேண்டுதல் தலைவியின் மாண்பாயிற்றென்க. 

வித்திய உழவர் என்றது கூலிக்காக விதை விதைத்தல் போன்ற தொழிலைச் செய்யும் உழவரைக் குறிப்பது. அவ் வுழவர் நெல் விளைந்து பெருகிக் கிடைக்கும் பெரும்பயனைக் கருதார்; அன்றைய தொழிலுக்குக் கூலியாகக் கிடைக்கும் நெல்லையே குறியாய்க் கொள்வார். இத்தன்மை, இல்லறம் எனும் நற்பேறு கருதாது அன்றன்றைக்குக் கிடைக்கும் வருவாயையே பெரிதாய்க் கொள்ளும் பரத்தையரை உணர்த்துவதாம்; அத்தகையோரின் சிற்றின்பத்தையே நாடிச் செல்கிறாய் எனத் தலைவனை உள்ளறுத்துக் கழறுவது என்பதுமாம். பூக்கஞல் ஊரன் என்றது மலர் செறிந்த ஊரன் என, குறிப்பால், மாண்புடைய இல்லக்கிழத்தியைப் பெற்ற ஊரனை உணர்த்துவதாம்.

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 2



வாழி யாதன் வாழி யவினி 

விளைக வயலே வருக விரவல 

ரெனவேட் டோளே யாயே யாமே 

பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்குந் 

தண்டுரை யூரன் கேண்மை 

வழிவழிச் சிறக்க வெனவேட் டேமே. 


துறையும் விளக்கமும் : (முதல் பாடலின் விளக்கமே இங்கும் பொருந்தும்)  


அருஞ்சொற்பொருள்

யாய் – எம்பெருமாட்டி

வருக விரவலர் என – இரவலர் வருவாராக என 

வேட்டேள் – விரும்பினள்

நீலம் – கருங்குவளை மலர்

நெய்தல் நிகர்க்கும் – நெய்தல் மலர் ஒப்பாகும்; 

தண்துறை – குளிர்ந்த நீர்த்துறை 

கேண்மை – உறவு, உரிமை, நட்பு


உரை : ஆதன் வாழி, அவினி வாழி என்றும், கழனிகளில் கூலங்கள் குறைவின்றி விளைந்து இரவலர் நாற்திசையினின்றும் வருவாராக என்றும் விரும்பியவள் எம் பெருமானாட்டி. தோழியராகிய நாங்களோ, பல் இதழ் கருங்குவளையொடு நெய்தல் மலரும் ஒப்பாக விளங்கும் குளிர்ந்த நீர்த்துறையினையுடைய பெருமான் எம்பெருமானாட்டிபாற் கொண்ட காதல் உரிமை நாள்தோறும் பெருகிச் சிறப்புறுவதாக என்று பெரிதும் விரும்பியிருந்தோம். 


உரைவிளக்கம்: வயல் விளைக என்றது, இல்லறம் சிறப்புற, உலகிண்கண் தலைசிறந்த உழவுத் தொழில் சிறப்புடன் விளங்குவதன் தேவையை உணர்த்துவதாம். இரவலரைப் பேணுவது இல்லறச் சிறப்புகளுள் ஒன்று என்பதனால், இரவலர் வருக என மாண்புடன் தலைவி உரைப்பதும் ஆகிற்று. 

நறுமணமிகுந்த குவளை மலருடன் மணமில்லாத நெய்தல் மலரும் ஒப்பாக விளங்கும் ஊரன் எனத் தலைவனைத் தோழியர் வாழ்த்துவது, நற்பண்புமிக்க தலைவியையும் காமப் பரத்தையரையும் ஒன்றாக எண்ணும் தலைவனை இடித்துரைப்பதேயாகும் என்க.

மருதம் - வேட்கைப் பத்து - பாடல் 1




வாழி யாதன் வாழி யவினி 

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க 

வெணவேட் டோளே யாயே யாமே 

நனையக் காஞ்சிச் சினைய சிறுமீன் 

யாண ரூரன் வாழ்க 

பாணனும் வாழ்க வெனவேட் டேமே 


துறையும் விளக்கமும் : :தலைவன் தன் தலைவியைப் பிரிந்து, பரத்தை ஒழுக்கம் கொண்டு, பின் தீதெனத் தானே தெளிந்தவனாய்த் தன்னில்லம் புகும்போது, தலைவியின் மன நிலையை அறிந்துகொள்ளத் தோழியிடம் வினவுகிறான். தோழி பதில் கூறுவதே இப்பாடல். தொல்காப்பிய நூற்பாவின்கண் வரும்“பேணா வொழுக்கம் நாணிய பொருளினும்” எனவரும் விதியைப் பொருந்திக் கொள்க. இதற்குக் கைகோள் கற்பு. அதாவது இதன் களவொழுக்கம் ‘கற்பு’ என்பதாம்.


அருஞ்சொற்பொருள்

ஆதன் - செல்வக் கடுங்கோ வாழியாதன் எனும் சேரர்குடித் தலைவன்

அவினி - வாழியாதனின் மகன் அவினி எனும் சேர மன்னன்

யாய் – எம்பெருமாட்டி

பொலிக – விளைக

பொன் – செல்வம்

வேட்டோள் – விரும்பியிருந்தாள்

நனைய – மலர்களையுடைய

காஞ்சி – காஞ்சி மரம்

சினைய – முட்டைகளையுடைய

யாணர் – புதிது புதிதாகச் செல்வம் வந்து சேர்தல்

பாணன் – தலைவனுக்கு உறுதுணையாகத் தூது செல்லும் பாணன்

வேட்டேம் – விரும்பியிருந்தோம்.  


உரை : “ஆதனும் அவினியும் வாழிய! நெல்லும் பொன்னும் மிகுந்து சிறப்புறட்டும்” என விரும்பி நின்றவள் எம் தலைவி. நானும் தலைவியின் தாயும், “மலருடைய காஞ்சியும் சினையுடைய சிறுமீனும், நல்வருவாயும் உடைய ஊரினனே, நீ வாழிய! பாணனும் வாழிய’ என விரும்பி நின்றோம். 


உரைவிளக்கம் : தலைவனின் குறையைப் பிறர் அறியவிடாது மறைத்த நற்பண்பினள் தலைவி. மன்னனை வாழ்த்தி, நெல்லும் பொன்னும் பெருக வேண்டுமென விரும்புகிறாள். என்னை? 

 “அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்பும் சிறவாது” சிலப்பதிகாரம் ஆம்! முறைமை பேணும் நல்லரசில் பெண்டிற் கற்பும் சிறப்பாகப் பேணப்படும் என்பதாம். மேலும், நெல்லும் பொன்னும் பெருக விரும்பியதன் காரணம், உண்டி கொடுத்தலும் பொன் வழங்குதலும் இல்லறத்தின் விருந்தோம்பல் குணம் என்பதாம்.

 தலைவி இவ்வாறிருக்க, தோழியும் அன்னையும் ‘தலைவன் நலமுடன் வாழவேண்டும்’ என்று விரும்பியதாகக் கூறுகிறாள். அதே வேளையில் தோழி கூறும் கூர்மிகு சொற்களைக் காணுங்கள். ‘நனையக் காஞ்சிச் சினைய சிறுமீன்’ ‘மலரும் மீனும் ஒருங்கே விளையும் ஊரனென்று குறிப்பிட்டு குலமகளிரையும் பொதுமகளிரையும் ஒப்புக்கொண்டு ஒழுகும் குணமுடையவன்’ என இடித்துரைக்கவும் தவறவில்லை.  

இறுதியில் முத்தாய்ப்பாக, ‘பாணனும் வாழ்க’ என்று கூறுகிறாள். நல்லோரும் வள்ளண்மை உள்ளோரும் கண்டு வாழ்த்துவது பாணர் மரபு. ‘பாணர் வாழ்க’ என்பது, பாணர் வாழ்ந்து உன்னையும் வாழ்த்துமாறு இசைபெற நீ வாழ்வாயாக என்பதும் அறிவுறுத்தல்தானே.

ஐங்குறுநூறு - முன்னுரை



“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) 

ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா

ரேத்துங் கலியோ டகம்புறமென்(று) 

இத்திறத்த எட்டுத் தொகை” 

எனும் இன்னிசை வெண்பாவை நோக்க, எட்டுத்தொகை எனும் சங்கப் பாடல்களில் மூன்றாவதாக வைத்துப் போற்றப்படுவது ‘ஐங்குறுநூறு’ என அறிகிறோம். 

இவ் வைங்குறுநூற்றுப் பாடல்களையே விளக்கமாகவும், பொருள் நயம் சுட்டிக் காட்டியும், தமிழர் பண்பாட்டு வழக்காற்றை எடுத்துரைத்தும் எழுத விழைந்த மனத்தினால், தொடராக இங்கே தரத் தொடங்குகிறேன். 

ஐங்குறுநூற்றின் வரலாறு : கடைச் சங்க காலத்தே, சேரமன்னர் தோன்றலாகக் ‘கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’ எனும் மன்னர் புகழ்மிக வாழ்ந்த முடிவேந்தர்களுள் ஒருவர் என அறிகிறோம். இவருடைய விருப்பத்தின்பேரில், ‘புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்’ எனும் புலவர் கொண்ட பணியின் அருமையைத் தலைமேற்கொண்டு ஐந்து நல்லிசைப் புலவர்கள் சிறப்பான நூறு நூறு பாடல்களாகத் தந்ததே ‘ஐங்குறுநூறு’ எனும் தொகையாகும். 

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பது தமிழர் வாழ்வியல். ஐங்குறுநூற்றின் முதல் நூறு ‘மருதத் திணைப்’ பாடல்களைப் பாடியவர் ‘ஓரம்போகியார்’. புரவலர்களைச் சிறப்பாகப் புரந்தவன் ‘செல்வக் கடுங்கோ வாழியாதன்’. அவனது வழித்தோன்றல் ‘அவினி’ என்பான். இருவரும் தமது வள்ளன்மையால் சிறப்பு பெற்றிருந்தனர். இந்நூறு பாடல்களை எழுவதற்கான ஊக்கமாகத் திகழ்ந்தோனும் அவினியே. அதனால், அவர்களையே தொடக்கமாக வாழ்த்தித் தமிழர் பண்பாடு போற்றி அமைகிறார் புலவர். 

ஐங்குறு நூற்றின் முதல் திணையாக ‘மருதம்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்பன தொடர்ந்து வருவன ஆகும். ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள். மருதத் திணையில் முதல் பத்து பாடல்கள் ‘வேட்கைப் பத்து’ எனப்படும். ‘வேட்கை’ எனும் விருப்பமே பாக்களில் விரவி நிற்பதால் இப்பெயர் அமைந்தது எனலாம்.